திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.28 திருமழபாடி பண் - கொல்லி |
காலையார் வண்டினங் கிண்டிய காருறுஞ்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.
|
1 |
கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்
துறையணி குருகினந் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழ பாடியே.
|
2 |
அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியுஞ்
செந்தமிழ்க் கீதமுஞ் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.
|
3 |
அத்தியின் உரிதனை யழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க் கருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.
|
4 |
கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்
வெங்கண்வா ளரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே.
|
5 |
பாலனா ராருயிர் பாங்கினால் உணவருங்
காலனார் உயிர்செகக் காலினாற் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
மாலினார் வழிபடு மாமழ பாடியே.
|
6 |
விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினாற் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.
|
7 |
கரத்தினாற் கயிலையை எடுத்தகார் அரக்கன
சிரத்தினை யூன்றலுஞ் சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்தநரம் பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.
|
8 |
ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்
நாடினாக்க் கரியசீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.
|
9 |
உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.
|
10 |
ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ்
சீலத்தான் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.48 திருமழபாடி பண் - கௌசிகம் |
அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யாற்றொழு வார்தக வாளரே.
|
1 |
விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாம்மழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.
|
2 |
முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல வுங்கையி லேந்திய
மழுவி னானுறை யும்மழ பாடியைத்
தொழுமின் நுந்துய ரானவை தீரவே.
|
3 |
கலையி னான்மறை யான்கதி யாகிய
மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.
|
4 |
நல்வி னைப்பயன் நான்மறை யின்பொருள்
கல்வி யாயக ருத்தன் உருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்தும் அதுபுக ழாகுமே.
|
5 |
நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
ஆடி னானெரி கானிடை மாநடம்
பாடி னாரிசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே.
|
6 |
மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
மன்னி னானுறை மாமழ பாடியைப்
பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின வோயுமே.
|
7 |
தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
தன்னி லங்க அடர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னி லங்க வுறுபிணி யில்லையே.
|
8 |
திருவின் நாயக னுஞ்செழுந் தாமரை
மருவி னானுந் தொழத்தழல் மாண்பமர்
உருவி னானுறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.
|
9 |
நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
மெலியும் நம்முடன் மேல்வினை யானவே.
|
10 |
மந்தம் உந்து பொழில்மழ பாடியுள்
எந்தை சந்தம் இனிதுகந் தேத்துவான்
கந்த மார்கடற் காழியுள் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |